Sunday, April 1, 2012

பாம்பு - 1



Inline image 5

பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்யமா? என்று.

Inline image 2

அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.

சரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அது பாம்பு தானாகக் கட்டிகொண்ட விடா? அல்லது வாடகை வீடா?” என்றால் இரண்டும் இல்லை. பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது. புற்று என்பது கரையான்கள தாம் வாழக் கட்டிக் கொண்ட வீடு. அந்தப் புற்றுகளுக் குள்ளோ அல்லது எலி வளைகளுக் குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.

Inline image 1


வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்?


Inline image 4

கரையான்

எலிகளின் கதையும் இதேதான். பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.

நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள். அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள். இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல. ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும்? அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும்.

பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பதில்லை. நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.

அன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.

இந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae) அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.

Inline image 3

செய்யான் பாம்பு

செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.

இந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர். ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும். இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம், அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

மிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம். மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம்? அதுதான் மலைப் பாம்பு, சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.

Inline image 2

மலைப் பாம்பு

மலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும். வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும். அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.

மலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும். மரத்தின் மீதும் ஏறும். தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.

வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து. ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.

கட்டுரை என எழுதும்போது நான் வருவது தவிற்கப் பட வேண்டிய ஒன்று. ஆனால் இது படித்துப் பட்டம் பெருவதற்காக எழுதும் கட்டுரை அல்ல. பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல. பாம்பைப் பற்றி ஒரு பாமரன் எழுதப் போகும் கட்டுரை. ஆகவே நடுவில் நான் நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.

திருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம். அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள். அவர்கள் வீட்டில் பேசுவது அக்ரகாரத் தமிழில். ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு. ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள். சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.

தம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி. அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள். தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.

அவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன். பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள்? எப்படி அளிப்பீர்கள்?” என்று நான் கேட்க அவர், இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர். அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது. பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது. ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன. அதன் உயிர் பிரிந்தது. ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை. சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது.. அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.

பின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார். அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது. பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன். சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது. என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன. நான், அதை எடுத்து விடுங்கள்”, எனக் கத்தினேன். நீயே எடு என்றார். நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன். தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு. இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம். பின அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம், என்றார். அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன். அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று. உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.

அன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை. காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான்.

சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.

நகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர். ஏனெனில் பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு. அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான். அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது. நீந்துகிறது.

மெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான். அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.

நுகர்தல் : பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு. எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான். ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள். பின் எப்படி நுகர்கின்றன அவை?

ஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா? நுகர்வதற்காகத் தான்.

ஒலி கேட்டல் : மகுடியின் இசையில் மயங்கியது நாகம் என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வேண்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.

இடியேருண்ட நாகம் போல்....” இது எந்த அளவு உண்மை? உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை. பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும். மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும். ஆனால் அவ்வாறு கேட்பதற்கு நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது. அகச் செவிகள் உண்டு. அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும். ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.

ஒளி காணல் : பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது. அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட. தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே? என்ன செய்ய? அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.

விஷம் :பாம்பிற்குப் பல்லில் விஷம். தேளுக்குக் கொடுக்கில் விஷம். அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம். இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை? பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம். முன்னது ஐம்பது சத வீதம் உண்மை. பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை. அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது. விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.

Inline image 1

http://encarta.msn.com/media_701681865_761578341_-1_1/snake_fangs.html

கிலு கிலுப்பை எனத் தன் வாலினால் சல சல ஒலி எழுப்பும் பாம்பு அதன் விஷப் பற்கள் வெளியே தெரிய

பாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும். அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.

பாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.

தோலுரித்தல் : தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள். பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு. பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.

பாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல. அதனைக் கடித்து சத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.

சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது. சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.

நாக ரத்தினம் : “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது. அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும். அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும். இது உண்மையா, கட்டுக் கதையா? பின்னது என்றே நான் சொல்வேன்.

கட்டுரையும் பாம்பைப் போலவே நீண்டு கொண்டு போவதால் இப்போதைக்கு நிறுத்திக் கொண்டு மீண்டும் தொடர்கிறேன்.

என்ன வேண்டும்

எது வேண்டும் சொல் மனமே

அன்பு உள்ளம்

இன்ப வெள்ளம்

அண்மைப் பொருளெலாம்

அழகாய் மலரும்

தேவை இல்லை அன்பு பொழியக்

காசு பணம்

போதுமே பாசம் கொண்ட

நேச மனம்

பேச்சில் கடுமை

மாறா வன்மம் வளர்க்கும்

பேச்சில் இனிமை

பேரின்பம் பயக்கும்

எது வேண்டும் சொல் மனமே

இன்பம் வேண்டுமா அன்றித்

துன்பம் வேண்டுமா

எது வேண்டும் சொல் மனமே

நடராஜன் கல்பட்டு


--

Saturday, March 31, 2012

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்


பாம்பு தாரா

பாம்பு தாரா என்று ஒரு பறவை. நீர் நிலைகளில் வாழ்ந்திடும் பறவையிது. இப் பறவையை ஆங்கிலத்தில் அனிங்கா அல்லது டார்டர் (Anhinga or Darter) என்று அழைப்பார்கள்.

Inline image 1

(பாம்பு தாரா – படம் பிடித்து ஜானி வீ – Picture by Jhonny Wee)

இந்தப் பறவையின் உணவு மீன்கள். இப்பறவை மீன் பிடிப்பததற்கும் மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்டு வாழும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்த படி இருந்து கொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால் இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப் படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும்.

இது தன் உடல் பூராவையும் நீருள் வைத்துக் கொண்டு நீந்திடும் போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றும். இப்பறவைக்கு பாம்பு தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே.

மீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத்தை மட்டும் நிருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாயுள்ளே செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும். இந்தக் காட்சி பார்த்து ரசித்திட வேண்டிய ஒன்று.

Inline image 2

(படம் பேர்ட் ஹாலிடேஸ் (Bird holidays) என்ற தளத்தில் இருந்து)

மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும் போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணைப் பசை இருக்கும். தவிறவும் சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால் பாம்பு தாராவின் சிறகுகளில் அந்த எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும்.

வயிறு முட்ட மீன் உண்டாயிற்று. இனி பறந்திட வேண்டுமே? சிறகுகள் நன்றாக நனைந்திருக்கும் போது எப்படிப் பறப்பது? கஷ்டப் பட்டு மெல்லப் பறந்து அருகில் உள்ள ஒரு கல்லின் மீதோ, கிளையின் மீதோ அமர்ந்து தன் சிறகுகளை விரித்துப் பிடித்துக் கொண்டு வெய்யிலில் உலர வைத்துக் கொள்ளும். சிறகுகள் உலர்ந்த பின் பறந்து சென்று விடும்.

Inline image 3

(பாம்பு தாரா சிறகுகளைக் காய வைத்துக் கொள்ளல் –

படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து)

இனப் பெருக்கக் காலத்தில் பாம்பு தாரா குடும்பம் நடத்துவது நீர் நிலைகள் அருகே மரக் கிளைகளில் குச்சி சுள்ளிகளைக் கொண்டு கட்டிய கூடுகளில்.

பாம்பு தாராவை தமிழ் நாட்டில் வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயத்திலும், கர்னாடகாவில் ரங்கன திட்டு பறவைகள் சரணாலயத்திலும் பார்க்கலாம்..

நடராஜன் கல்பட்டு

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்


தேள்


உலகில் 50 டிகிரி வட அக்ஷய ரேகைக்கு மேலும் ந்யூசிலாந்திலும், அன்டார்டிகாவிலும் தவிற மற்ற எல்லாப் பிரதேசங்களிலும் காணப் படும் ஒர் உயிரினம் தேள். இது சாதாரணமாக 20 டிகிரியிலிருந்து 67 டிகிரி செல்சிஸ் உஷ்ணம் வரை உள்ள பிரதேசங்களில் வாழ்கிறது. இமய மலைத் தொடரில் காணப் படும் தேள், தென் அமெரிகாவில் படகோனியா என்ற இடத்தில் காணப்படும் தேள், மற்றும் வட ஐரோபாவில் காணப்படும் தேள் இவை -25 டிகிரி செல்சியஸ் வரை தாங்கக் கூடியவை.

தேள் ஒரு எட்டுக் கால் பூச்சி. எட்டுக்கால் பூச்சிக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் இதன் கொடுக்கு.

Inline image 9

Inline image 8


தேள், எட்டுக்கால் பூச்சி இவற்றின் இனத்திற்கான ஆங்கிலப் பெயர் ஆர்த்ரொபோட்ஸ், (Arthropods) அதாவது ஒட்டுகள் கொண்ட கால் பூச்சி (Insects with jointed feet). இவ்வகைப் பூச்சிகளுக்கு அவற்றின் கடினமான தோல் தான் எலும்புக் கூடு. உடலும் துண்டுகளால் ஆனது.

தேளின் எலும்புக் கூடு அதன் தோல்தான். இந்தக் கடினமான எலும்புக் கூடு அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதால் நாம் சட்டையைக் கழற்றுவது போல் அவ்வப்போது தோலை உரித்துக் கொண்டு அதிலிருந்து வெளியேறி விடும். அப்படி வெளியேறும் தேளின் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். பின்னார் மெல்ல மெல்ல கடினமாகிவிடும்.

1940 களில் ஒரு நவராத்திரியின் போது பரணில் இருந்த பெட்டியிலிருந்து பொம்மைகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரிய நாய் பொம்மையை எடுத்தபோது அடிப் பக்கம் இருந்த வலது கையில் என்னவோ பசக் என்றது. பொம்மையைக் கீழே போட்டு விடாமல் மெதுவாகக் கீழ் இறக்கிப் பார்த்தால் என் கையில் சட்னியாய் ஒரு பெரிய தேள் வெள்ளை நிறத்தில்! தேள் வெள்ளை நிறத்திலா என்கிறீர்களா? அப்போது தான் தோல் உரித்த தேள், அதுவும் வெளிச்சம் துளியும் இன்றி மரப் பெட்டிக்குள் இருந்ததால் அந்த வெள்ளை நிறம். பொம்மைப் பெட்டியில் அந்தத் தேள் சற்றும் முன் கழற்றிப் போட்ட அதன் சட்டை!

தேளின் தோலுக்கு ஒரு தனிக் குணம் அது குறுகிய நீல ஒளியில் (Near Ultra Violet rays) நீலப் பச்சை நிறத்தில் தோன்றும். (ராமர் பச்சை என்று பெண்கள் புடவைகள் பற்றிப் பேசும்போது சொல்வார்களே அந்த நிறம்)

Inline image 7

http://www.desertusa.com/oct96/Scorp_uv.jpg

இரவில் தேளைத் தேடியோ அல்லது வேறு எதாவதொரு நோக்கத்துடனோ காடுகளில் செல்பவர்கள் கையில் கருப்பு விளக்கு என்று சொல்லப் படும் ஒரு வகை குறுகிய நீல வெளிச்ச விளக்கினை எடுத்துச் செல்வார்கள். (Black light or Woods light என்பது இந்த விளக்கின் பெயர்)

தேள் எட்டுக் கால் பூச்சி போல முட்டை இடாது. வயிற்றில் உண்டாகும் முட்டைகளை அது (இரண்டு முதல் நூறு வரை இருக்கலாம், சாதாரணமாக எட்டு முதல் பத்து வரை), செதிள்கள் போன்றிருக்கும் தன் வயிற்றுப் பட்டைகள் ஒன்றின் அடியில் இருக்கும் பாலியல் உறுப்புக்குள்ளே வைத்திருக்கும். அவை குஞ்சுகளாக மாறியதும் ஒவ்வொன்றாக வெளி வந்து தாயின் மேல் எறி உட்கார்ந்து விமானம் தாங்கிக் கப்பல்களின் விமானங்கள் போல சவாரி செய்யும். சிலர் இதைத்தான் தவறாகப் புரிந்து கொண்டு, தேள் இனத்தில் தாய்க்குக் குஞ்சுகளே எமன் அவை வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருவதால்”, என்பார்கள்.

Inline image 6

http://en.wikipedia.org/wiki/File:Scorpionwithyoung.JPG

தேளின் மண வாழ்க்கை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. ஆண் தேள் தன் இனப் பெண் தேளினை, பட்டாம் பூச்சி போன்று அது வெளி விடும் வாசனை மூலம் கண்டு பிடித்து, தன் கைகளைப் பெண் தேளின் கைகளோடு கோத்துக் கொள்ளும். பின் அவை இரண்டுமாகச் சுற்றிச் சுற்றி வந்து ஒரு வகை நடனமாடும். (ஆங்கிலத்திலே வால்ட்ஸ் என்பார்களே அது போல). அப்போது வாயினால் பெண் தேளை அதன் வாயில் கடிப்பதும் சில சமயம் முரண்டு பிடிக்கும் பெண் தேளை அடக்குவதற்காக அதன் கைகளில் லேசாகக் கொட்டி சிறிதளவு விஷத்தினை ஏற்றுவதும் உண்டு.

தேள் நடனமாடுவது ஒரு உள் நோக்குடந்தான். உண்மையில் அது வெளிவிட இருக்கும் விந்துக்கள் கொண்ட பையினை தரையில் விட சரியான இடம் தேடுவதற்கும், பின் அவ்வாறு விடப் பட்ட விந்துப் பைகளின் மேல் பெண் தேளின் அடி வயிறு உரசும்படி இழுத்துச் செல்வதற்கும் தான். அப்படி அது செய்யும் போது, விந்துப் பைகள் கிழிந்து விந்துக்கள் பெண் தேளின் பாலியல் உறுப்புக்குள் சென்றடைகிறது. பெண் தேளும் கருவுற்று முட்டைகள் அதன் வயிற்றுக் குள்ளே உண்டாகிறது. அவற்றிலிருந்தே குஞ்சுகள் பின் வெளி வருகின்றன.

தேள் நாட்டியம்

Inline image 5

http://johnbokma.com/mexit/2008/03/01/scorpions-from-molcaxac-puebla-mating.jpg

தந்தை இல்லாமலே பிள்ளைகள் பெரும் தேள் வகைகளும் உள்ளன.

தேள் வாழ்வது கற்களுக்கடியிலும், இடுக்குகளிலும், பொந்துகளிலும், வீட்டில் உள்ள அடைசல்கள் இடையேவும், தென்னை போன்ற சில மரங்களிலும்தான்.

தேள் கொட்டும்போது உள்ளே செலுத்தப் படும் விஷம் சில பாம்புகளின் விஷம் போலவே நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடிய ஒரு விஷம். ஆனால் வீரியத்தில் பல மடங்கு குறைவானது. ஆனாலும் உலகில் தேள் கடித்து (கொட்டி) இறப்பவர்களின் எண்ணிக்கை பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். காரணம் மக்கள் அதிகம் நடமாடும் வயல் வெளிகளிலும் தரிசல் நிலங்களிலும் அதிக அளவில் தேள்கள் இருப்பதுதான்.

வட ஆப்பிரிக்கக் காடுகளிலும் மெக்சிகோவிலும் தான் உலகிலேயே அதிக அளவில் மனிதர்கள் தேள் கடியினால் இறப்பது நிகழ்கிறது.

வட ஆப்பிரிக்க நாடுகளிலும், மத்தியக் கிழக்குப் பிரதேசம் என்று அழைக்கப்படும் அரபு நாடுகளிலும் உள்ள (Death stalker) சாவு தேடி அலையும் தேள் தான் (தன் சாவைத் தேடி அல்ல) உலகிலேயே மிகக் கொடிய விஷம் கொண்ட தேள்.

Inline image 10

http://en.wikipedia.org/wiki/File:Deathstalker_ST_07.JPG

மனிதர்கள் உயிர் போக்கும் விஷம் கொண்ட தேள் வகை

(Leiurus quinquestriatus),

நம் நாட்டில். ஒருவரை பல முறைகள் கொட்டியதால் இறந்தவர்கள் உண்டு. கோயமுத்தூரில் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த பள்ளி மாணவி ஒர் உதாரணம்.

தேள் கொட்டினால் அதனால் உண்டாகும் வலி தேனீயோ குளவியோ கொட்டியதை விட சற்றே அதிகமாக இருக்கும்.

நம் இந்திய நாட்டில் சாதாரணமாக மூன்று வகைத் தேள்களைக் காணலாம். அவை நம் வீடுகளில் காணபடும் செம்பழுப்பு உடலும் சிறு கருப்பு முதுகையும் கொண்ட தேள், தென்னை மரத்தில் காணப்படும் செந்தேள் மற்றும் காடுகளிலும், கடப்பா மற்றும் குல்பர்கா ஜில்லாக்களில் அதிகமாகக் காணப்படும் நட்டுவாக்கிளி என்றழைக்கப் படும் பெரிய உருவம் கொண்ட கருப்புத் தேளும் ஆகும். இது தமிழ் நாட்டிலும் ஓரளவுக்கு உண்டு. ஹோசூர் அருகே ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை கல்லூரி விடுமுறையின் போது குல்பர்காவில் இருந்த எனது பெற்றோர்களைக் காணச் சென்றேன். அவர்கள் குடி இருந்த வீடு கடப்பைக் கல் பலகைகளினால் கட்டப் பட்டது. அங்கு கழிப்பறையில் நம் ஊரில் கரப்பான் பூச்சிகள் நடமாடுவது போல சில நட்டுவாக்கிளிகள் நடமாடிக் கொண்டிருந்ததப் பார்த்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.


Inline image 11

http://en.wikipedia.org/wiki/File:Asian_forest_scorpion_in_Khao_Yai_National_Park.JPG

நட்டுவாக்கிளி



தேளின் உணவு பூச்சிகள், பாச்சை, கரப்பான் பூச்சி போன்றவை. தேள் யாருக்கு உணவு? பெரிய பூரான், பல்லி, ஓணான், பறவைகள், வௌவால், எலி இவற்றுக்குத் தேள் உணவு.

தேளை, கவனத்துடன் செயலில் இறங்கினால் உங்கள் கைகளாலேயே பிடிக்கலாம்.

தேள் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் போது கொடுக்கினைப் பக்க வாட்டில் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கும். அதன் முன்னே ஒரு ஈர்க் குச்சியையோ, வைக்கோல் துண்டினையோ சிறிது ஆட்டினால் அது உடனே கொட்டத் தயாராகத் தன் கொடுக்கினைத் தூக்கி வட்டமாக வளைத்துப் பிடித்துக் கொண்டு அசையாமல் தயாராக நிற்கும். அப்போது மெல்ல பின் புறமிருந்து நெருங்கி கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடுவே கொடுக்கின் கடைசி மணி வருமாறு வைத்துக் கொண்டு விரல்களை கப்பென்று நெறுக்கித் தேளைப் பிடித்து விடலாம். ஆனால் பிடி கெட்டியாக இருக வேண்டும. பிடியை ஒரு போதும் தளர்த்தி விடக் கூடாது. தேள் உங்கள் விரல்களைக் கவ்வும். அதனால் ஒன்றும் ஆகாது. பின் தேளை உயிருடன் விட வேண்டும் என்றால் தூரத் தூக்கி எறிய வேண்டும். அல்லது கொல்ல வேண்டுமானால் தரையை நோக்கி ஓங்கி அடிக்க வேண்டும். இதில் சற்றும் நிதானம் கூடாது. நிதானம் காட்டினால் கொட்டு பட வேண்டி வரும்.

நான் பல முறை தேள்களைப் பிடித்திருக்கிறேன் மிகவும் அசௌகரியமான் இடங்களில் இருந்தும் கூட. உதாரணத்திற்கு ஒரு அடுப்புக் கரி வைத்திருந்த மண் எண்ணை டப்பாவின் உள்ளிருந்தும் கூடப் பிடித்திருக்கிறேன். ஆனாலும்............................

ஒரு முறை ஹைதராபதில் இருந்தபோது, பிடித்த தேள் குஞ்சினைக் கையில் வைத்துக் கொண்டு என் தைரியத்தை காலனி குழந்தைகள் முன்னே பறை சாற்ற எண்ணி அதை விட்டு விட்டுப் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் ஒரு கேள்வி ஓடியது, தேள் கொட்டினால் வலி மிக அதிகமாக இருக்கும் என்கிறார்களே பலர். அது எப்படி இருக்கும்?” என்று. இப்படி நினைத்துக் கொண்டே ஒரு முறை பிடிக்கப் போன போது கனவுலகில் இருந்த என் விரலில் தேள் கொட்டி விட்டது. அடுத்த பத்து நாட்கள் அவஸ்தைப் பட்டேன் வலியுடன்.

தேள் கொட்டினால் என்ன செய்யலாம் அதற்கு வைத்தியமாக?

தேள் கடிக்கு மிக சுலபமான வைத்தியம் ஒன்று இருக்கிறது. தேள் கொட்டிய இடத்தில் முத்துப் போல ஒரு சிறு துளி நீர் கசிவதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் மூன்று நான்கு துகள்கள் பொட்டேசியம் பெர்மாங்கனேட்டையும், அதே அளவு டார்டாரிக் அமிலத் துகள்களையும் வைத்து ஒரு ஈர்க் குச்சியில் தண்ணீர் எடுத்து அந்த ரசாயனங்களின் மீது வைத்திட அது பொங்கிடும், கொட்டிய இடத்தில் மிக சூட்டுடன். கொஞ்ச நேரத்தில் தேள் கொட்டியதின் வலி மறந்து விடும்.

இந்த வைத்தியத்தினை எனது தந்தை செய்வார். இதையே அன்பர் சுப்ரமணியம் என்பவரும் எழுதி இருந்தார் முன்பு இதே கட்டுரையை பல் சுவையில் வைத்தியக் குறிப்பு எழுதாது பிரசுரித்திருந்த போது.

தேள்களை செல்லப் பிராணியாக வைத்துக் கொள்வோரும் சாதனை புரிவதற்கென்றே பல தேள்களுடன் ஒரு அறையில் பல மணி நேரங்களைக் கழிப்பவர்களும் இவ்வுலகில் உண்டு.

Inline image 1

http://newsimg.bbc.co.uk/media/images/45410000/jpg/_45410899_-20.jpg

காஞ்சனா கெடகேவ் என்ற இந்தத் தாய்லாந்து நாட்டுப் பெண் விஷமுள்ள சுமார் 5000 தேள்களுடன் 30 நாட்களுக்கு மேல் ஒரு அறையில் தங்கி உலக சாதனை புரிந்திருக்கிறார். இந்த சாதனையை அவர் புரியும் போது பதிமூன்று முறை தேள்களினால் கொட்டப்பட்டாராம். அவருக்கு அளிக்கப் பட்ட பட்டம் தேள் ராணி!”

01-04-2012 நடராஜன் கல்பட்டு

மெத்தை

Inline image 1

(படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)

வெகு தூரம் நடந்து வந்தேன்

சுட்டெரிக்கும் வெய்யிலிலே

இளைப்பாரிட எங்குமே இல்லையே

இம்மி யளவும் பசு மரத்தின் நிழல்

இருந்தால் தானே மரங்கள்

இருந்திடும் நிழல்

வெட்டிடுறாரே அவைதான்

விரிவாக்கச் சாலைகளை

வெட்டிய மரமும் ஆகிடுமோ

வெல்வெட்டு மெத்தையாய்

கால் கடுக்க வெகு தூரம்

நடந்து வந்த எனக்கே

நடராஜன் கல்பட்டு

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 1

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 1

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (41) உடும்பு

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (41) உடும்பு


Inline image 1

(உடும்பு - திருச்சி தஞ்சாவூர் சாலை அருகே 1975ல் எடுத்த படம்)

உடும்புப் பிடின்னு கேள்விப் பட்டிருப்பீங்களே. விடாது இறுக்கப் பிடித்துக் கொள்வதற்கு உடும்புப் பிடி என்று சொல்வதுண்டு. அப்படி என்ன விசேஷம் அந்த உடும்புப் பிடியில்?

அந்த நாள் காதல் கதைகளில் சொல்லுவார்கள். ஒரு ராஜ குமாரன் தன் காதெலியைக் காண, அந்தப்புரத்தின் உயர்ந்த மதில் சுவற்றைத் தாண்டிட உடும்பின் இடுப்பில் கயிற்றினைக் கட்டி அதைத் தூக்கி சுவற்றின் மீது எறிந்து அது கெட்டியாகச் சுவற்றைப் பிடித்துக் கொள்ள கயிற்றைய்ப் பிடித்துக் கொண்டு அவன் சுவற்றின் மீது ஏறினான் என்று. உடும்பின் கால்களும் அதன் கூரிய நகங்களும் அவ்வளவு வலுவானவை.

உடும்பு (இதை ஆங்கிலத்தில் Monitor lizard என்று அழைப்பார்கள்) ஊர்வனவான பல்லி, ஒணான், முதலை இனத்தைச் சேர்ந்தது. உடும்புகளில் சுமார் நூறு வகையான உடும்புகள் உள்ளன. சுமார் 8 அங்குல (20 சென்டி மீடர்) நீளமுள்ள உடும்பில் இருந்து பத்தடி (3 மீட்டர்) வரை நீளமுள்ள உடும்பு இனங்கள் வரை உள்ளன.

Inline image 3

(பத்தடி நீளமுள்ள கொமோடோ ட்ரேகன்-படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து)

உடும்பின் நாக்கு பாம்பின் நாக்கினைப் போன்றே நுனியில் பிளந்திருக்கும். அவ்வப்போது நாக்கை வெளியே துருத்தி இந்தப் புறமும் அந்தப் புறமுமாக ஆட்டிப் பின் உள் இழுத்துக் கொள்ளும். இது அப்படிச் செய்வது பாம்பினைப் போலவே தன் இரை சென்றதை நுகர்ந்து கண்டறிவதற்காக இருக்கலாம். அல்லது மணம் செய்திடத் தக்க பெண் அவ்வழிச் சென்றிருக்கிறாளா என்பதைக் கண்டறிவதற்காக இருக்கலாம்.

உடும்பு என்னும் பிராணி, ஓணான், பல்லி இவற்றின் இனத்தைச் சேர்ந்தாலும் இவற்றின் இல்வாழ்க்கை அவற்றைப் போல பலாத்கார வாழ்க்கை அல்ல. இன்பக் காதல் வாழ்க்கை.

அரணை போன்றே, ஆண் உடும்பு பெண் உடும்பின் கூடவே சென்றிடும். பெண் உடும்பு சற்று ஓய்வெடுத்தால் ஆண் உடும்பு பெண் உடும்பின் உடலருகேயே தானும் படுத்துக் கொண்டு தலையோடு தலை வைத்துக் கொள்ளும். அவ்வப்போது நாவினால் பெண்ணின் கழுத்தையும் தலையையும் நக்கிக் கொடுக்கும். (முத்தம் கொடுத்திடுதோ?) மனையாள் இசைந்த பின் புணரும், பின் சில நாட்களுள், பெண் உடும்பு இரண்டு மூன்றடி ஆழமுள்ள ஒரு குழி தோண்டி அதனுள் சுமார் இருபத்தி ஆறு முட்டைகள் வரை இட்டு. குழியை மண்ணால் மூடி விடும். முட்டைகளில் உள்ள கரு முதிர்ந்து குட்டியான உடன் அவை மண்ணைத் தள்ளிக் கொண்டு வெளியேறிடும்.

உடும்புகளை வீட்டில் வளர்ப்பவர்களும் உண்டு. கீழுள்ள படத்தில் ஒருவர் தான் வளர்த்த உடும்பின் காயத்திற்கு வைத்தியம் செய்திட அதை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதைப் பாருங்கள்.

Inline image 4

(உடும்புக்கு வைத்தியம் - படம் விக்கிபீடியா இணைய தளத்தில் இருந்து)

உடும்பின் தோல் உடம்போடு ஒட்டிடாமல் இருக்கும் ஒன்று போலத் தோன்றும். கமலா ஆரஞ்சுக்கும் சாத்துக் குடிக்கும் வித்தியாசம் தெரியுமல்லவா உங்களுக்கு? முன்னதன் தோல் சுளையோடு ஒட்டிடாமல் இருக்கும். அந்த ஆரஞ்சின் மற்றொரு பெயர் “கமலா லூஸ் ஜேக்கெட்” என்பதாகும். அது போலத்தான் உடும்பின் தோலும் உடம்போடு ஒட்டிடாத ஒன்று போலத் தோன்றும் கைகளில் உடும்பை எடுத்துப் பார்க்கும் போது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் ரோமுலஸ் விட்டாக்கரின் சொந்த பாம்புப் பண்ணைக்குச் சென்ற போது நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் ராஜஸ்தான் பாலைவன ஓணான் ஒன்றை என் கையில் எடுத்துக் கொடுத்தார். எனக்கு ஒரு கணம் பயம் வந்து விட்டது அந்த ஓணான் என் கையில் தன் தோலைக் கழற்றிக் கொடுத்து விட்டு ஓட முயற்சிக்கிறதோ என்று பயத்தில் அங்கிருந்த ஒரு கள்ளிச் செடியில் அதை விட்டு விட்டுப் படம் பிடித்தேன்.

Inline image 5

(பாலைவனத்து ஓணான் – படம் ந.க.)


உடும்புகளின் உணவு பூச்சிகள், புழுக்கள், பறவைகள், சிறிய மிருகங்களில் இருந்து காட்டுப் பன்றி, மான், எருமை வரை தங்கள் உடல் அளவு, சக்தி இவற்றுக்கேற்ற வாறு.

உடும்புகள் யாருக்கு உணவு? சந்தேகமே வேண்டாம். மனிதனுக்குதான். உடும்பு மாமிசம் உண்டால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என்பது தென் இந்தியா மற்றும் மலேசியாவில் பரவலாக நம்பப் படும் ஒன்று. இந்த ஒரு காரணம் போதுமே உடும்பின் அதி வேக மறைவிற்கு.

‘உடும்புத் தைலம்’ மூட்டு வலிக்கு மருந்து’ என்று சொல்வோரும் உண்டு. சிற்றூர் சந்தைகளில் சில ஆதி வாசிகள், நரிக் குறவர்கள் போன்றவர்கள் கடை பரப்புவதைப் பார்த்திருப்பீர்களே. அவற்றில் உடும்பு உப்புக் கண்டம், உடும்புத் தைலம் இவை வெகு வேகமாக விற்பனை ஆவதையும் பார்த் திருக்கலாம் நீங்கள்.

நம் நாட்டில் உடும்பினை பூஜை செய்பவர்களும் உண்டு. வட இந்தியாவில் சில இடங்களில் நாக பஞ்சமி தினத்தன்று பெரிய உடும்புகளுக்கு மஞ்சள் குங்குமம் பூசி, மூங்கில் கட்டைகளில் கட்டித் தூக்கிச் செல்வோரின் படங்களை பத்திரிகைகளிலும், தொலைக் காட்சியிலும் நான் பார்த்திருக்கிறேன்.

நம் பின் வரும் சந்ததிகளுக்கு உயிருள்ள உடும்பினைக் காட்டிட வேண்டும் என்றால் உடும்பு பற்றிய தவறான எண்ணங்கள் மக்கள் மதிதியில் இருந்து மறைய வேண்டும். அதற்கு நாம் நம்மாலான சிறு துரும்பையாவது நகர்த்திடல் வேண்டும். செய்வோமா? அதற்கு முதல் அடி தான் இந்தக் கட்டுரை.

நடராஜன் கல்பட்டு

ஒரு சைவம் அசைவம் பேசுகிறது - மீனு வருது மீனு வருது

Inline image 2

(மெரீனா கடற்கரை 1956ல் – படம் நடராஜன் கல்பட்டு)

மீனு வருது மீனு வருது

கட்டு மரத்துலே

கட்டி இளுக்கிறோம் கட்டி இளுக்கிறோம்

தாம்பக் கவுத்தாலே நாங்க தாம்பக் கவுத்தாலே

ஓடி வாங்க ஓடி வாங்க

வகை வகையா மீனு பாக்க

வாங்கிடலாம் வாங்கிடலாம்

வாய்க்குப் புடிச்ச மீனெயுந்தான்

வெச்சுப் பாரு வெச்சு பாரு

மீனு கொளெம்பு நீ மீனு கொளம்பு

வாசம் வந்தே வாசம் வந்தே

ஆளெத் தூக்கும் அது ஆளெத் தூக்கும்

பரவும் பாரு வாசம் அண்டெ ஊட்டுக்கும்

சைவமுந்தான் அறியாமே

கையெத் தூக்கும் அது கையெத் தூக்கும்

மூக்கெ நல்லா அமுக்கிடவே

கையெத் தூக்கும்

01-04-2012 நடராஜன் கல்பட்டு